Wednesday, February 13, 2008

காதல்

மானுடத்தின் சாபக்கேடா
அல்லது
விமோசனமா
என்று விடை கிடையாத
புதிர்!

உயிரின் பூகம்பத்துக்கு
ஊடகம் !
உணர்வுகளிலலூட்உருவும்
மின்னிறக்கம்!
உயிரோடு ஒரு வதை!
உயிரையும்
எரித்துவிடும் சிதை!

தூர இருந்து ரசித்த போது
ரோஜாவாய் சிரிக்கும்
அனுபவித்த பின் தான்
முள்ளாய் குற்றும்
பிரிவுகளால்..

யாதுமாகி நின்று
உருக்கொடுத்து எழுப்பும்;
சமயத்தில்
யாதுமற்றதாக்கி
உருக்குலைத்து அழிக்கும்

Monday, February 11, 2008

எனக்கான வதை..!

தேடலுடலான காத்திருப்புகளை
விதியாக தீர்ப்பு எழுதி வைத்து
காதல் என்ற வரம்
வதையாகத் தந்தவன்
நீ!

முந்திய மாலைப் பொழுதில்
தேன் முகிழ்த்த வண்டு
விலகிப் போன பாதை
பார்த்து
வாடிப் போன மலர்
மாலையாகவும் வழியில்லை
மணக்கவும் முடியவில்லை...

உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
காதலை ஒரு மைல் கல்லாக நினைத்தேன்..
உன்னைப் பாராத நாட்களில் தான்
உறைக்கிறது
அது வெறும் சுமைக் கல் என்று!

நீயில்லாத நேரங்களில்
வெறுமையாகிப் போன வாழ்கையை
எதை வைத்து நிரப்ப?
உன்னைத் தொடர்ந்து வருவது
உன் நிழல் என்று நினைக்காதே
கூடவே வருவது என் உயிர்.
பத்திரமாக
திருப்பி அனுப்பு...
அல்லது கல்லறையில் தான்
காத்திருக்கும்
என் காதல்!

ஏக்கங்கள் அரித்த மனது
புற்றாகிப் போக
பிரிவு என்ற சர்ப்பம்
அனாக் கொண்டாவாக அணைத்து
மூச்சடைக்க வைக்கிறது!

உன்னைப் பற்றிய
கனவுகளுக்காக ஏங்கிய கண்களுக்கு
தூங்கும் வழி தெரியவில்லை!
உன் நினைவுகள்
துயில் தடுக்கும் காரணிகளாக..

உயிர்த்திருக்க ஒரு காரணமாக
உன் காதல் மட்டும்
என்னுடன் வைத்திருக்க..
எரி நெருப்பில் சிதையாக
அதுவே
என்னை வதைப்பது
என்ன நியாயம்?

சலனமற்ற குளத்தில்
வலை வீசி மீன் பிடித்து
தரையில் விட்டாய்...
உயிரோடு துடிக்கும் வலியை
நீ ரசிப்பதற்காக என்றே
நானும் வலியை
என்னுடன் தக்க வைக்கிறேன்..

வெறும் காற்றே
சுவாசமாகவும், சுவையாகவும்
மொழி தெரியாத தீவில்
தனியாக நான்!
வாழ்கையின் பாதை
முன்னே நீளமாக
பயமுறுத்தும் எதிர்காலத்தில்
எனக்கென்று துணையாக
உன் காதலுடன் மட்டுமே
பயணிக்கிறேன்.....
தேடலுடனான காத்திருப்புகளில்
எழுதப்பட்ட விதியை
ஏற்று....!

Saturday, December 29, 2007

ஆழிப் பேரலை - 2004. நினைவு!

எத்தனை உயிர்கள்? எத்தனை உறவுகள்?
காவு கொண்ட நாளது..
எத்தனை காலம் போனாலும்
மாறாத ரணமது ,

அலைகளெல்லாம் ஆழியாகி அழிக்க வல்லது
இயற்கை அன்னையின்
ஊழித் தாண்டவத்தின் உச்சம் கொடியது..
விழுங்குவது தன் மக்களுயிர் என்று
விளங்கிய படியே அன்னை பசியாறிய நாளது..

கால தேவன் நாளேட்டில்
கடற்கரையின் கறைகள் தீட்டிய கோரம்!
கடல் கலந்த அலைகளை மறைத்த
பிணக்குவியல்களின் பாரம்!

கொள்ளி போட நாதியின்றி..
கோடித் துணி போர்த்த ஆளின்றி
அள்ளி எடுத்து குப்பையாய்
ஆங்கோர் தீவின் ஓரத்தில்
எரிந்த சாம்பல் மேடுகளில்
என்பு பொறுக்க்கி , ஈமை செய்ய
எவரும் இங்கில்லாமல்
பொங்கிய புனல் வந்து
அனல் கொண்டு குவித்த நாளது..!

Friday, December 28, 2007

பாவம் காலதேவன்!

இதோ
ஒரு வருடம் உதிர்கிறது.
இந்த மரத்தின்
முன்னூற்றி அறுபத்தி ஐந்து இலைகளும்
சருகுப் புளுதிகளாகி
மண்ணோடு மண்ணாக
மக்கி போகிறது..

கால தேவன் தன்னுடைய
ஒரு புத்தகத்தை
மூடி வைக்கிறான்.
அவனுடைய
புத்தகங்களின் பக்கங்களில் தான்
எத்தனை எத்தனை
கறைகள்?
எத்த்னை கறுப்புப் பக்கங்கள்?
அழிக்க முடியாத
குருதிப் புனல்களில்
எழுதப்பட்ட
வரலாற்று தொடர்கள்!


உலகத் தேசிய வரைபடத்தின்
ஒவ்வொரு
இரத்தக் கறைகளும்
அவனுடைய நாளேட்டை
அசுத்தப்படுத்திவிட்டன.
வழமை போல..
கால தேவனின் கண்களில்
கூட
கண்ணீரா?
ஆம்.....
ஐந்தடி மனிதனின்
ஆறறிவு
அகிலத்தைப் படுத்தும் பாட்டைப் பார்த்து
அவன் அழுகிறான்.

மிருகமாக இருந்தவனை
இனமென்றும்,மதமென்றும்
மொழியென்றும்
வாழ்வியலுக்காக
வரையறுத்து
தன்னை தானே மானுடமாக்கியவன்..
இன்று மீண்டும்
அதே வரைமுறைகளைக் கொண்டு
எப்படி
மிருகத்தனமாகினான்...
என்று புரியவில்லை
கால தேவனுக்கு!

ஆயினும்
இன்றைய புதிய தளிர் இலையைப்
பார்க்கிறான்...
நம்பிக்கையோடு...
இனிமேலாவது
இவை கறைப்படாமல் இருக்குமாம்..
பாவம்
கால தேவனுக்குக் கூட
பகல் கனவு வரும் போலும்

Wednesday, August 22, 2007

புலன்கள் துருத்தும் உணர்வுகள்..!

சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான்
இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்...!

எனக்கான சரியான இடம்
எங்கோ ஒரு புள்ளியில் புலமாய்,
பயணப்பட வேண்டிய அகதியாய்
நான் !
தவிர்க்கவியலாத , அவசியமான
நீண்ட தூரப் பயணம்
சென்றடையவென்று இன்னமும்
மீந்திருக்கிறது.
சாவிகள் தொலைந்து போன
துருப்பிடித்த இரும்புக் கதவுகளின் பின்னால்
நான் தேடிய என் வாழ்கையின் தீர்வுகளும்
தேர்வுகளின் தகமைகளும்
அடைந்து போனதை
உணர்த்தப்பட்ட நிஜத்தின் வலி
மீண்டு ...வெளிக் கொணர திராணியில்லை..
முயற்சிகளின் தோல்விகளில்
வெகு விரைவில் களைத்துப் போகிறேன்.

விளக்கங்கள் சொல்லவியலாத
கனத்த மனம்
எதனுள்ளோ நான் சிறைபட்டதை
எனக்கு உணர்த்துகிறது.
ஆனாலும் ...அப்பால்
பயணிக்கவென்று எதிரில்
வெறிச்சோடிய
தனித்துப் போன வாழ்கைச்சாலை!
தடைகள் தகர்த்தி
நட்க்க வேண்டிய கட்டாயங்கள் எனக்கு!
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு,
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

நினைவுகள் சுமந்து களைத்துவிட்ட இதயத்துடன்
நரகங்களுக்கூடாகச் செல்லும்
புதர்கள் மண்டிய முட் பாதைகளில்
எனக்கான சுவர்க்கத்தின் புலத்தை தேடியபடி..
மூச்சிரைக்கிறது..!
இளைப்பாறவும்,
சற்றே சுமை இறக்கவும்
ஏதாவது இடம் தேடுகிறேன்...
மயானங்கள் இறைந்த பூமியில்
சமாதிக் கற்களா சுமை தாங்கியாக?

ஆனாலும்..அப்பாலும்...
நான்
எனக்கான மனிதர்களின்
இதயங்கள் வைக்க வேண்டிய இடத்தில்
பாறாங்கற்கள் புகுந்திருப்பதை
கவனிக்க விரும்பவில்லை,
நிரந்தரமாய்
முகங்களுக்கு மேல்
முகமூடிகள் பூட்டிய வேடதாரிகளை
பார்க்க வேண்டாம்,
என்னை நானே
இறக்கைகள் இழந்த பட்சியாய்
பச்சாதபப் பட வேண்டாம்...
ஆதலால்
பயணப்பட வேண்டும்..
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

முட்டாள்.

உன்னைப் பார்த்த நேரத்தில்
உயிர் நாடிகளில் குளிர் காய்ச்சல்
உறங்க விடாமல்
உயிர் வதைத்தது!!

தேடி வந்து வதை தந்துவிட்டுப் போனவனே
எந்த ஜென்மத்துப் பகையை
இன்று
இங்கு காதலலென்று சொல்லி
பழி தீர்க்கிறாய்?

என் நீரோடை மனதில்
சின்னதாகக் காதல் கல் எறிந்தாய்
என்றிருந்தேன்...
எப்படி இப்படி
இதயத்தில்
பாறாங்கல்லாய் கனக்கிறது?

நேரங்கள் உருண்டோடும் போதெல்லாம்
உன் பிரிவை
கணங்களால் கூட்டியது.
மறு முறை
உன்னைச் சந்திக்கும் வரை
என் கணத்தாக்கங்கள் ஸ்தம்பித்துப் போயின.

உனை காணாத வேளைகளில்
கடிகார முட்களுக்கும்
வேகம் வரவில்லை,
எனக்கு வேதனையே!!

நீ வந்த பின்
அவற்றுக்கும் வேகம் கூடியது
என் நாடித்துடிப்பைப் போல்,
அதுவும் வேதனையே...!

உன்னைப் புறந்தள்ளி
நான் தப்பிப்பதற்கான எந்த வழியுமில்லை!
காதல் என்ற சாபத்துடன்
என் துருப்பிடித்த இதயமும் எண்ணங்களூம்
உன்னை உள்வாங்கிய பின் தான்
சுரணை ஏசுகிறது,
நான் எத்தகைய முட்டாளென்று...!!

Friday, August 17, 2007

இயலாமை


நான்
அமைதியாய் இருப்பது போல்
பாவனை செய்து பார்க்கின்றேன்,
ஆயினும் கடினமாகவே இருக்கின்றது
தினமும் நானாக இல்லாமல் நடிப்பதென்பது...
என்னைச் சுற்றிய சிந்தனைகளில்
அமிழ்த்தவென்று முயன்ற எத்தனிப்புகள் தோற்று
என்னை விட்டு நானே வழுக்கி
எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்?

குழப்பங்கள் இல்லாத என்னுடைய சுயத்துக்கு
இனி எங்கே நான் போவது?
கிளறிக் கிளறி நாறிப்போன குப்பைகளுக்குள்
மடிந்து மக்கி உக்கிப் போனது என்ன,
வேட்கை நிறைந்த இலட்சியங்களும்
அரை குறையாய் குற்றுயிராய்
உடைந்து போன கனவுகளுமா?
மலர் தூவும் வசந்தமாய் கனவு காண
புயல் உமிழ்ந்த உக்கிரமான தோல்வியில் காதல்
மரணித்துப் போன யதார்த்தம் சுட்ட இதயம்
மயானமாய்.. சூனியமாய்..வெறிச்சுப் போய்...


அழகாக மெருகேற்றப் பட்ட விதானங்களுடைய
உலகத்தையும்
ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவங்களையும் அடையும் வரை
காலம் எனக்காக காத்திருக்க மாட்டேனென்ற அநியாயத்துடன்
விரைந்து விரைந்து பயணப்பட
விலகிப் போன உறவை துரத்தும் திராணியில்லை..
மூச்சிரைக்க மூப்படையும் உயிர்க்க்கூட்டைக் காவிய
என்னுடைய ஆயுளின் பயணித்தலில்
வாழ்கையின் கவனப் பிசகல்கள்
சரி செய்யப்படவியலாத தரவுகளுடன்
மிகப் பிழையான கணக்காகிப் போனது போல..?

சூனியம் வைக்கப்பட்ட விதியில்
குழிகளுக்குள் தள்ளிவிட எதிரிகள் தேவைப்படவில்லை,
தூக்கி விட நண்பர்களும் கிடைக்கவில்லை..
என்னைப் பற்றிய கழிவிரக்கங்களுடன்
நூலளவு நம்பிக்கையை பற்றிய தொங்கலில்
ஊசலாடிய எதிர்காலத்தின் வேயப்பட்ட நூலெணியில்
என்னை நானே தாங்கிக் கொண்டு பரிதாபமாக....

வசந்தத்துக்கும் வலிகளுக்கும் மத்தியில்
அன்புக்கும் வெறுப்புக்குமான மையத்தில்
வாழ்கைக்கும் மரணத்துக்குமான இடைப்பட்ட ஆயுளில்
எனக்கும் வலுவிழந்த என்னுடைய சுயத்துக்கும் நடுவில்
அந்தரத்தில் தொங்கும் பாதைகளில்
முட்கள் துருத்திய அபாயம்...

வாழ்கைச் சாகரத்தின் சுழிகளுக்குள்
தொலைக்கப்பட்ட காதலின் பின்னான நிகழ்வுகளில்
ஆர்ப்பரிக்கும் நினைவலைகளின் ஆர்ப்பரிப்பில்
நீலமான ஆழமான, ஆல காலமான மனம்
என்னை அமிழ்த்தி மூச்சிரைக்க வைக்கிறது...
வலி கண்ட இதயம் போராடிய களைப்பில்
கேட்டது
நிற்கட்டுமா ? இருக்கட்டுமா?