Wednesday, August 22, 2007

புலன்கள் துருத்தும் உணர்வுகள்..!

சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான்
இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்...!

எனக்கான சரியான இடம்
எங்கோ ஒரு புள்ளியில் புலமாய்,
பயணப்பட வேண்டிய அகதியாய்
நான் !
தவிர்க்கவியலாத , அவசியமான
நீண்ட தூரப் பயணம்
சென்றடையவென்று இன்னமும்
மீந்திருக்கிறது.
சாவிகள் தொலைந்து போன
துருப்பிடித்த இரும்புக் கதவுகளின் பின்னால்
நான் தேடிய என் வாழ்கையின் தீர்வுகளும்
தேர்வுகளின் தகமைகளும்
அடைந்து போனதை
உணர்த்தப்பட்ட நிஜத்தின் வலி
மீண்டு ...வெளிக் கொணர திராணியில்லை..
முயற்சிகளின் தோல்விகளில்
வெகு விரைவில் களைத்துப் போகிறேன்.

விளக்கங்கள் சொல்லவியலாத
கனத்த மனம்
எதனுள்ளோ நான் சிறைபட்டதை
எனக்கு உணர்த்துகிறது.
ஆனாலும் ...அப்பால்
பயணிக்கவென்று எதிரில்
வெறிச்சோடிய
தனித்துப் போன வாழ்கைச்சாலை!
தடைகள் தகர்த்தி
நட்க்க வேண்டிய கட்டாயங்கள் எனக்கு!
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு,
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

நினைவுகள் சுமந்து களைத்துவிட்ட இதயத்துடன்
நரகங்களுக்கூடாகச் செல்லும்
புதர்கள் மண்டிய முட் பாதைகளில்
எனக்கான சுவர்க்கத்தின் புலத்தை தேடியபடி..
மூச்சிரைக்கிறது..!
இளைப்பாறவும்,
சற்றே சுமை இறக்கவும்
ஏதாவது இடம் தேடுகிறேன்...
மயானங்கள் இறைந்த பூமியில்
சமாதிக் கற்களா சுமை தாங்கியாக?

ஆனாலும்..அப்பாலும்...
நான்
எனக்கான மனிதர்களின்
இதயங்கள் வைக்க வேண்டிய இடத்தில்
பாறாங்கற்கள் புகுந்திருப்பதை
கவனிக்க விரும்பவில்லை,
நிரந்தரமாய்
முகங்களுக்கு மேல்
முகமூடிகள் பூட்டிய வேடதாரிகளை
பார்க்க வேண்டாம்,
என்னை நானே
இறக்கைகள் இழந்த பட்சியாய்
பச்சாதபப் பட வேண்டாம்...
ஆதலால்
பயணப்பட வேண்டும்..
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

5 comments:

இளங்குமரன் said...

உங்கள் கவிதைகளின் சிறப்பில் மெய்சிலிர்த்துப் போனேன்.

இதயங்கள் வைக்க வேண்டிய இடத்தில்
பாறாங்கற்கள் புகுந்திருப்பதை
கவனிக்க விரும்பவில்லை,


கவிதையின் ஆழத்தில் நானே மூழ்கிப் போனேன்.

என்றும் அன்புடன்
இளங்குமரன்

ஸ்வாதி said...

நண்பர் இளங்குமரனு அவர்களுக்கு!

உங்கள் கருத்துப் பதிவுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுவாதி

சிவக்குமார் said...

ஆன்ம தேடல் பற்றிய அருமையான கவிதை. வார்த்தைகள் அதீதமாய்க் கனக்கின்றன.
"புலன்கள் துறுத்தும் உணர்வுகள்" - அழகான பிரயோகம்
பாறாங்கல் இதயக்காரர்கள், முகமூடி மனிதர்கள் என்று மக்களை வர்ணிக்க வேண்டுமா?
'தகமை' என்கிற பதத்தின் அர்த்தம் என்ன?

ஸ்வாதி said...

அன்பான நண்பருக்கு!
உங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிகவும் நன்றி!

பாறாங்கல் இதயக்காரர்கள், முகமூடி மனிதர்கள் என்று மக்களை வர்ணிக்க வேண்டுமா?

இரக்கமற்ற மனிதர்களையோ , நண்பர்கள் போல் வேசம் போடும் எதிரிகளையோ புல்லுருவிகளையோ நீங்கள் சந்திக்கவே இல்லை என்றால் உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். ஆனால் என்வரையில் நான் மிகவும் துரதிஷ்டசாலி!!
அத்தகைய மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள்...நிறைய சந்தித்தும் இருக்கிறேன். :)

'தகமை' என்கிற பதத்தின் அர்த்தம் என்ன?

தகுதி என்ற பொருள்.

மீண்டும் வருக! :)
அன்புடன்
சுவாதி

சிவக்குமார் said...

எல்லாருமே ஒரு வகையில் வேடதாரிகள் தாம். ஒப்பனைகளின் அளவில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். நான் எல்லாரையும் ஏற்கவும், சகிக்கவும், நகைக்கவும் பழகிக் கொண்டேன்.அவர்களைப் பற்றி என்னிடம் எந்த குற்றச்சாட்டும் இல்லை.