Sunday, August 1, 2010

இனிய தோழமைகளுக்கு........!


ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையை அகில உலக நண்பர்கள் தினமாக அமெரிக்க காங்கிரசு 1935ம் ஆண்டில் பிரகடனப்படுத்தியது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கிய பங்கு வகிக்கும் நட்பையும் நண்பர்களையும் கௌரவப்படுத்தும் விதமாக இந்த தினம் இருக்கட்டும் என்று இந்த நாள் அமெரிக்க அரசால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த யோசனையை மற்ற நாடுகளில் அரசுகலுக்கும் பிடித்துப் போகவே பெரும்பாலான நாடுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக் கிழமையை உலக நண்பர்கள் தினமாக ஏற்று உத்தியோகபூர்வமாக பீரகடப்படுத்தினவாம். போரும் பகையும் இனக்கலவரங்களும் மதவெறியும் வேரோடிக் கிடக்கும் அதே உலகில் தான் இன்று இவை அத்தனையையும் தன் காலடிக்குள் மிதித்து புதைக்கக் கூடிய வலிமை மிக்க நட்பைக் கொண்டாட இன்றைய நாள் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகிறது.



1997ம் ஆண்டு குழந்தைகளின் கதைகளில் வரும் வின்னி த ஃபூ என்ற கதாபாத்திரம் உலக நட்பு தூதுவராக நியமிக்கப்பட்டார். 1935ம் ஆண்டு முதன் முதலாக நண்பர்கள் தினம் வெளிப்படுத்தப்பட்ட போதும் நண்பர்கள் தினத்துக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல கதைகள், சரித்திர ஆதாரங்கள் வந்திருக்கின்றனவாம். புனித பைபிளில் நட்பின் கடவுளாக ஆபிரகாமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாம். அதே போல் பைபிளின் புதிய பதிப்பில் இயேசு நாதரையும், அவரது சீடர்களையும் நல்ல நண்பர்களாக குறிப்பிடுகிறதாம். (இந்த தகவல் சரியா என்று யாராவது கிறிஸ்தவ நண்பர்கள் தெரியப்படுத்தவும்.) அதே போல் மஹாபாரதக் கதையில் கிருஷ்ணன் பாண்டவர்களின் குறிப்பாக அர்ச்சுனனின் நெருங்கிய நட்புக்கு அடையாளப்படுத்தப்படுகிறார். அதே போல் கர்ணன் துரியோதனனின் தூய்மையான நட்பைப் பற்றி மிக விரிவாக விபரிக்கப்பட்டிருக்கிறது. இராமாயணத்தின் குகனின் நட்பு அற்புதமாக சிலாகிக்கப்பட்டிருக்கிறது. முழுமுதல் கடவுளான சிவனையே நாயன்மாரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது நண்பராகத் தான் போற்றியிருக்கிறார். சமயத்தில் சுந்தரருக்கும் அவரது மனைவிக்குமிடையில் தூதும் போயிருக்கிறார் . பிசிராந்தையர் , கோப்பெருஞ்சோழருக்கிடையிலான நட்பு மிகவும் உன்னதமானது, பார்க்காமலே ஒருவரை ஒருவர் நண்பர்களாக ஏற்றுக் கொண்டு நட்பை மேன்மைப்படுத்தியவர்கள் இவர்கள் என்று வரலாறு சொல்கிறது..

நண்பர்கள் தினத்தின் அடையாளமாகவும், நினைவுச் சின்னமாகவும் ஒருத்தருக்கொருத்தர் பல பரிசுப் பொருட்களையும் வாழ்த்து மடல்களையும் பரிமாறிக் கொண்டாலும் மலர்கள் பரிமாறிக் கொள்வது போல் மனதுக்கு ஆத்மதிருப்தியைக் கொடுப்பவை வேறு எவையுமிருக்காது. நட்புக்கு அடையாளமாக மஞ்சள் வர்ண ரோசா மலர்கள் பிரபலமானவை. சில குறிப்பிட்ட மலர்கள் ஒவ்வொரு விதமான காரணத்தை , நன்பர்கள் சொல்ல நினைக்கும் வார்த்தைகளின் அடையாளங்களாக நண்பர்கள் தினமன்று தோழமைகளுக்கிடையில் பரிமாறப்பட்டுவருகின்றன. அவற்றில் சில கீழே....:
  • 13 ரோசா - என்றும் நட்புடன் நண்பர்களாக இருக்க....
  • கமெலியா மலர் (Camellia) - எல்லாவிதத்திலும் பரிபூரணமான நண்பன்/ நண்பி.
  • கார்னேஷன் மலர் (Carnation )(Pink) - ஒரு போதும் உன்னை மறக்கமுடியாது
  • கிரிஷ்ஷாந்திமம் {செவ்வந்திப் பூ தானே??} ( Chrysanthemum) - நீ ஒரு அருமையான /உயர்வான நண்பன்/நண்பி.
  • ஜெரானியம் (Geranium) (Oak Leaved) - எமது நட்பு என்றென்றும் உண்மையானது
  • ஐரிஷ் (Iris) - உனது நட்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • ஐவி (Ivy) - நட்பு
  • பெரிவிங்கிள் (Periwinkle) (Blue) - நட்பின் தொடக்கமாக
  • ரோசா (Rose )(Pink) - என்னுடைய நண்பனுக்காக / நண்பிக்காக.


நட்பைப் பற்றியும் நண்பர்களைப் பற்றியும் ஒருவர் எழுதி இன்னொருவர் புரிந்து கொள்ளவா வேண்டும்?? என்னைக் கேட்டால் வாழ்கையில் ஒரு நட்பாவது இல்லாத வாழ்கை சுவாரஸ்யமற்றது. நண்பர்கள் இல்லாதவன் தான் உலகில் உண்மையான ஏழை. நட்பை நேசிக்கத் தெரியாதவனும் , நண்பனை புரிந்து கொள்ளாதவனும் முட்டாள்.

"Friends are the persons who walk into your life when everyone walks out". இது ஒரு உண்மையான கூற்று. எம்மைச் சுற்றி எத்தனையோ பேர் கூடி இருப்பர். எங்கள் குதூகலங்களிலும், கொண்டட்டங்களிலும் கலகலப்பாக எத்தனையோ பேர் இருப்பார்கள்..ஆனால் எங்களுக்கென்று ஒரு இக்கட்டான நிலை வரும் போது ஒவ்வொருவராக விலகி செல்வார்கள்.. ஆனால் உண்மையான தோழமை மட்டும் விலகிப் போக மாட்டாது அல்லது அந்த நேரத்தில் எமக்கு கை கொடுக்க எம் வாழ்கையில் அந்தக் கணத்தில் ஒரு கை உதவ முன்வருமேயானால் அந்த நபர் தான் உண்மையான நண்பன்/ நண்பி.

நண்பர்கள் நிறையப் பேர் இருக்கலாம்..ஆனாஅல் மிக நெருங்கிய நட்பு என்று ஓரிருவராவால் தான் இருக்க முடியும். அவர்களை நாம் முழுமையாக உணரும் தருணம் நம் வாழ்கையில் மிகவும் வெகுமதியான நேரமாக இருக்கும். அந்த தருணத்தை வேறு எதோடும் ஒப்பிட இயலாது. கசப்பும், இனிமையும் கலந்த அனுபவங்களின் தொகுப்பான வாழ்கையில் நட்பின் பக்கங்களில் நாம் நமக்காக அனுபவித்த துயரை விட நண்பன் நமக்காக அனுபவித்த இன்னல்கள் அதிகமாயிருப்பின் நாம் நல்ல நட்பை அடைந்திருக்கிறோம் என்பது நிச்சயம். நட்பை நேசிக்கத் தெரிந்த , ஆராதிக்க தெரிந்த நல்ல நண்பன் கிடைத்த பாக்கியவான் நாம் என்று அர்த்தம். ஆனால் அத்தனை இன்னல்களை எங்களால் அனுபவித்த நண்பனுக்கு எமது நட்பு எந்தளவு நல்ல நட்பாக இருந்திருக்கும்????? :):) ஒரு நேர்மையான நண்பன் ஆயிரம் உறவுகளை விட மேன்மை தங்கியவனாகிறான்.

Forget the times that he walked by. Forget the times he made you cry. Forget the times he spoke your name. Remember-now, you're not the same. Forget the time he held your hand. Forget the sweet things if you can. Forget the times, and don't pretend. Remember-now, he's just your friend

நண்பனின் குறைகளை கவனிக்காமல் அவனுடைய தவறுகளுக்கு துணை போகாமல் அவனை நல்ல வழியில் கொண்டு செலுத்தக் கூடிய திறமையானவன் நல்ல நண்பன் ஆகிறான்.

குழும நண்பர்கள் அனைவருக்கும் நான் நல்ல தோழியாக இருந்திருக்கிறோமா என்று எமக்கு தெரியாது. ஆனால் எமக்கு நல்ல நண்பர்களை, உறவுகளை இந்த இணைய உலகம் கொடுத்திருக்கிறது...அந்த இனிய தோழமைகளுக்கு எம்முடைய நன்றிகள்.

இனிய நட்பு நிறைத்த இதயங்கள் அனைவருக்கும் எமது இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!!

அன்புடன்
சிநேகன், சுவாதி
அஷ்வத்தாமா & அச்சுதன்

Monday, June 14, 2010

இணையம் தந்த இன்னுயிர் சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த சகோதரிகள் தின நல்வாழ்த்துகள்!

அன்புடன்
சுவாதி

Friday, May 8, 2009

Thursday, September 11, 2008

தாலாட்டு பாட வா!

தாலாட்டு பாட வா!


இப்படி ஒரு முயற்சிக்கு வித்திட்டவர் முத்தமிழ் குழுமத்தின் உறுப்பினரான நலம் பெறுக ஐயா தான். ஆண்மகனுக்கோர் கவிதை என்ற இழையில் எனக்கும் பாஸ்கர் என்ற பதிவருக்குமிடையில் உருவாகவிருந்த ஒரு கடுமையான பெண்ணியம் பற்றிய விவாதத்தை மட்டுப்படுத்த நலாம் பெறுக ஐயா நாசுக்காக மேற்கொண்ட சமாதான முயற்சியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது. பாஸ்கரை மகனாகவோ தம்பியாகவோ நினைத்து தாலாட்டு எழுதச் சொல்லி வேண்டுகோள் முன் வைத்துவிட்டார். :):) முரண்பாடான கருத்துகளுடன் முட்டி மோதத் தொடங்கிய இருவருக்குள் இப்படி ஒரு பந்தத்தை கற்பனை செய்யச் சொன்னதில் மூண்டெழுந்த ஆத்திரத்தையும், ஊற்றெடுத்த கருத்துகளையும் அப்படியே அமுக்கி வைக்க வேண்டியதாகிவிட்டது. என்னடா இது என்று தர்மசங்கடத்துக்குள்ளாகிவிட்டேன். திசை திரூப்பப்பட்டாலும் எனக்கு இந்த தாலாட்டு எழுதும் விசயம் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் தொடர்ந்து இந்த தாலாட்டு எழுதும் முயற்சியை குழுமத்தில் தொடக்கலாம் என்று இருக்கிறேன். அதன் முயற்சியில் பாஸ்கரை தம்பி பாப்பாவாக பாவித்து எழுதிய தாலாட்டு இது...... :):)

ஆராரோ ஆரிரரோ அருமைத் தம்பி கண்ணுறங்கு!
ஊருறங்கும் நேரமிது ஓவென்று நீரழலாமோ?
பாலுண்டீர், பழமுண்டீர்; பசியாறித் தூங்காமல்
ஏனழுதீர் எந்தம்பி? எதைக் கண்டு நீர் அருண்டீர்?

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணாடி முன்னின்றீரோ?கருமை முகம் தான் கண்டீரோ?
கண்ணுறங்க முடியாமல் கவலையினால் நீரழுதீரோ?
கண்ணெடுத்துப் பார்ப்பாரோ கன்னிமயில்கள் தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று

(ஆராரோ ஆரீரரோ)

கண்ணெடுத்துப் பார்ப்பாரோ காதலிக்க தானென்று
கண்மணியே கலங்காதீர் கருமை நிறம் நீரென்று
காக்கும் கடவுளும் கறுப்புதாண்டா..கண்மனியே கண்ணுறங்கு!
சூப்பர் ஸ்டாரும் கறுப்புதாண்டா; சுந்தரனே கண்ணுறங்கு!

(ஆராரோ ஆரீரரோ)

விரசாய் வளரணுமே வரவாய் உழைக்கணுமே
நிறைவாய் நகை நட்டு நீர் பூட்டனுமே அக்கைக்கு
பெரிசாய் பயந்தனையோ பேயலறல் அழுதனையோ
தரிசாய் போகுமென்று தங்கமே கலங்கினையோ?

(ஆராரோ ஆரீரரோ)

கடல் கடந்து போகணுமே காசு பணம் சேர்க்கணுமே
முழுசாக இளமையெல்லாம் விழலாக போகணுமோ
என்றுணர்ந்தா நீரழுதீர் என் தம்பி சொல்லியழும்
நன்றாக வாழ்கை வரும் கண்ணுறங்கு கண்மணியே!

(ஆராரோ ஆரீரரோ)

பெண் சோதரம் உடன் பிறப்பாய் பிறந்திட்ட விதி நினைந்து
வெஞ்சினமாய் வெகுண்டீரோ வெந்நீராய் விழி திறந்தீரோ?
கண்ணீரை துடையுமய்யா; கவலை தனை தவிருமைய்யா- அக்கா
கூடவர மாமனிருக்கார்; காதல் மட்டும் போதுமென்பார்

(ஆராரோ ஆரீரரோ)

Friday, July 18, 2008

தமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் - 2008ன் முடிவுகள்.

மரபுக் கவிதைப் பிரிவு
புதுக்கவிதைப் பிரிவு.
கட்டுரைப் பிரிவு.
சிறுகதைப் பிரிவு.
நகைச் சுவைத் துணுக்கு

ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது.

முதற்கண் போட்டியில் பங்கு பற்றிய அத்தனை படைப்பாளிகளுக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக. எமது அன்பான வேண்டுகோளுக்கிணங்க சிரமம் பாராமல் நடுவர்களாகப் பணியாற்றிய மத்தியஸ்தர பெருமக்களுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் பல பல............!!!!!!!



மரபுக்கவிதை பிரிவில் முதலாம் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. இப்போட்டிப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெருமதிப்புக்குரிய திருவாளர். வி.சுப்ரமணியம் அவர்கள்.
முதலாம் பரிசுக்கு யாரையும் தகுதியூடையவராக நடுவர் தேர்வு செய்யாததால் இரண்டாம் பரிசு "தசாவதாரம் " என்ற மரபுக் கவிதையை எழுதிய திரு.எஸ்.ராஜரிஷி அவர்களுக்கு 1000.00 ரூபா பணமும், 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

புதுக்கவிதைப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெரு மதிப்புக்குரிய திரு ஆஸிப் மீரான் அவர்கள். அவருடைய தேர்வின் படி
முதலாம் பரிசு - "ஒரு பனைமரத்தின் கீழே " என்ற கவிதையை அனுப்பிய திரு.ஆர்.நாகப்பன் அவர்களுக்கு.1500.00 ரூபா பணமும், 1500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
இரண்டாம் பரிசு - "காத்திருப்பின் வலிகள்" - என்ற கவிதையை அனுப்பிய திரு கோகுலன். (நமது தமிழ் பிரவாகம் குழுமத்தைச் சேர்ந்தவர்.) அவர்களுக்கு 1000.00 பணமும் 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அத்துடன் புதுக் கவிதைப் பிரிவில் நடுவரான திரு.ஆஸிப் மீரான் அவர்கள் இரு சிறப்புப் பரிசுகளை தனது சார்பில் அறிவித்திருக்கிறார். திரு ஆஸிப் மீரான் அவர்கள் வழங்கும் இரு சிறப்புப் பரிசுகளுக்கு உரியவர்கள் :
"இங்கு வாழ்கை வாங்க (விற்க)ப்படும்" என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு.சீனிவாசன் ஆளவந்தார் அவர்களுக்கு 500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
"உன் கடந்த காலத்தை உயிர் பெறச் செய்"என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு. ரஞ்சித்ப்ரீத்தன் அவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

கட்டுரைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் அன்புக்குரிய திருமதி கீதா சாம்பசிவம் அம்மையாரும், மரியாதைக்குரிய பண்டிதர். திரு.வை.சண்முகராஜா அவர்களுமாவர். இப்பிரிவில் நடுவர்களின் மதிப்பீடுகளின் படி
சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்கள் எழுதிய "ஈழத் தமிழரும் இந்திய அரசியலும்" என்ற கட்டுரை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்களுக்கு 2500.00 பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
திரு .கோகுலன் அவர்கள் எழுதிய "பெண்ணியம்" கட்டுரையும், திருமதி விசாலம் ராமன் எழுதிய "இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?" என்ற இரு கட்டுரைகளும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) இவர்கள் இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
சிறுகதைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் பிரபல எழுத்தாளாரான மதிப்புகுரிய திருவாளார். சுப்பிர பாரதி மணியன் . சிநேகத்துக்குரிய படைப்பாளி திருவாளர் ரசிகவ் ஞானியார், அன்புக்குரிய ஈழத்துப் படைப்பாளி செல்வி மாதுமை சிவசுப்ரமணியம் அவர்களுமாவார்கள். நடுவர்கள் மூவரின் மதிப்பீடுகளின்படி
திரு ஆதவா சூர்யா அவர்கள் எழுதிய "ஏனெனத் தெரியாத கணங்கள்"
என்ற சிறுகதை அதிக மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஆதவா சூர்யா அவர்களுக்கு 2500.00 ரூபா பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
திரு .சுப்பு ராஜ் அவர்கள் எழுதிய "அங்கு மட்டுமா அந்த சுவர்? " என்ற சிறுகதையும், திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் எழுதிய "பூத்த கொடி பூக்களின்றி" என்ற சிறுகதையும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) ஆகவே இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

நகைச்சுவைத் துணுக்குப் போட்டியில் போதிய அளவில் போட்டியாளர்கள் பங்களிப்பு தராததால் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.

நன்றி! வணக்கம்!

Thursday, April 3, 2008

தமிழ் பிரவாகம் நடத்தும் இலக்கியப் போட்டிகள். - 2008.

அன்புடன் நண்பர்களுக்கு!

வணக்கம்!

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தில் இருந்த இணையத் தளத்தில் தமிழ் மொழியின்
பங்களிப்பை பெருக்குவதில் தமிழ் குழுமங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. தமிழ் மொழியை சுவாசிக்கும் அத்தனை இதயங்களுக்கும் இக் குழுமங்கள் இலக்கியத்தையும் , இலக்கணத்தையும், வரலாற்றையும், அன்றாட உலக நடப்புகளையும் அலசும் கருத்துக் களமாக விளங்குவதோடு நல்ல பல நட்புகளையும் வழங்கி இருக்கின்றது.

இலைமறை காயாக இருக்கும் பல படைப்பாளிகளை வெளிச்சத்துக்கு
கொண்டு வர இணையத் தளமும் , வலைப்பூக்களும் , தமிழ் குழுமங்களும் பெரிதும் உதவி வருவது ஆத்ம திருப்தியை தரும் விசயமாக இருந்து வருகிறது. இத்தனை பெருவெள்ளமாக இலக்கியப் பெருக்கும், கருத்துக் களமுமாக தமிழ் குழுமங்கள் வளர்ந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் அதில் ஒரு துளியாக, சிறு தளமாக எமது தமிழ் பிரவாகம் உருவாகி வருவது குறித்து நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

தமிழ் பிரவாகத்தின் அன்புக்குரிய உறுப்பினர்களுக்கும் , எமது குழுமத்தின்
வளர்சியிலும் நலனிலும் அக்கறை கொண்டு பின் புலத்தில் எமக்கு ஆதரவாகவும
உறுதுணையாகவும் இருந்து வரும் நல் இதயங்களுக்கும் இந்த வேளையில் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவிக்க விழைகிறோம்.

வரும் மே மாதம் 1ம் திகதி தனது முதலாம் ஆண்டு பூர்த்தியை தமிழ் பிரவாகம் மிகச் சிறப்பாக கொண்டாடும் இலக்குடன் வலை உலகில் இலக்கிய ஆர்வத்துடன் இருக்கும் சகலரும் பங்கேற்கும் வண்ணம் இலக்கியப் போட்டிகளை நடத்த திட்டமுள்ளது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுகள் வரும் ஜூலை மாதம் நடை
பெறவிருக்கும் முத்தமிழ்- பிரவாக நண்பர்களின் சந்திப்பில் வழங்கப் படும்.

போட்டிகளின் விபரங்கள் வருமாறு:

இலக்கியப் போட்டிகள்

  1. சிறுகதை
  2. கவிதை
  3. கட்டுரை
  4. நகைச்சுவை துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடாத்தப்படும்.
  • ஒருவர் எத்தனை போட்டிகளிலும் பங்கு பெறலாம். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • ஒவ்வொரு ஆக்கமும் உங்கள் *சொந்தக் கற்பனையில்* படைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும்;
  • வேறெந்த ஊடகங்களிலும் பிரசுரமாகாத படைப்புகளாக இருக்க வேண்டும்.
  • மொழிபெயர்ப்பு படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
  • *ஆபாசம் அல்லது தனி மனிதக் கீறல் இருப்பதாகக் கருதப்படும் எந்த ஆக்கமும் போட்டியிலிருந்து நீக்கப்படும் அதிகாரம் நடுவர்களுக்கு வழங்கப்படும்.*
  • போட்டிகளுக்கான ஆக்கங்கள் நம்மை வந்தடைய வேண்டிய கடைசி திகதி *2008 ம் ஆண்டு மே 31ம் திகதி*.

சிறுகதை & கட்டுரை போட்டிகளின் பரிசு விபரங்கள்:

  • - 1வது பரிசு - 2500.00 பெறுமதியான புத்தகங்களும், 2500.00 இந்திய
ரூபாயும் வழங்கப்படும்.
  • 2 வது பரிசு- 1250.00 பெறுமதியான புத்தகங்களும் 1250.00 இந்திய

ரூபாயும் வழங்கப்படும்.

  • பரிசு பெறும் ஒவ்வொரு ஆக்கமும் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு மலரிலும், குழுமத்திலும் பிரசுரமாகும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்தில்பிரசுரமாகும்.

சிறுகதை:


  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • எத்தகைய கருவையும் பின்னணியாகக் கொண்டு கதை புனையப்படலாம்.
  • ஒருவர் ஒரு சிறுகதை ஆக்கம் மட்டுமே அனுப்பலாம்.
  • சிறுகதை 7 பக்கங்களிலிருந்து 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • நடுவர்களின் முடிவே இறுதியானது.

கட்டுரை:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • கட்டுரைகள் இங்கு தரப்பட்டிருக்கும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஒருவர் ஒரு கட்டுரை மட்டும் எழுதலாம்.
  • ஒவ்வொரு கட்டுரையும் 1000 சொற்களுக்கு மேற்படாதவையாக இருக்க வேண்டும்.


கட்டுரைகளுக்கான தலைப்புகள் :
  1. பெண்ணியம்.
  2. உலக அரங்கில் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை.
  3. தமிழ் கலாச்சாரமும் , இந்துசமயத்தின் ஆதிக்கமும்.
  4. உலக அரங்கில் இந்தியா வல்லரசாகக் கணிக்கப்டுகிறாதா இல்லையா?
  5. ஈழத்தமிழரும் , இந்திய அரசியலும்.
  6. அரசியலில் பொது மக்களின் பங்கு.
  7. இன்றைய இளைஞர்களின் வளர்ச்சி ஆக்கபூர்வமான பாதை நோக்கியா? அழிவுப்பாதையை நோக்கியா?
  8. இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா? இல்லையா?'
  9. மெல்லத் தமிழினி....வாழும்?வீழும்?
  10. கடவுள் பக்தியா , சுய கட்டுப்பாடா மனிதனை செம்மைப்படுத்தவல்லது?
  11. தியானம் என்பது....!


நகைச்சுவைத் துணுக்கு:

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • ஒருவர் ஆகக் குறைந்தது ஐந்து துணுக்குகளை ஒரே தாளில் அனுப்பலாம். ஆனால் சிறந்த துணுக்காக 3 துணுக்குகளே தேர்வு செய்யப்படும்.
  • ஒவ்வொரு துணுக்கும் பரிசாக தலா 500.00 இந்திய ரூபாய்கள் வழங்கப்படும்.


கவிதை:

கவிதைப் போட்டி 2 பிரிவுகளில் நடத்தப்படும்.

1. மரபுக் கவிதை.
2. புதுக்கவிதை

ஒவ்வொரு பிரிவிலும்

  • ஆபாசம் , தனி மனித கீறல் போன்ற கசடுகள் அற்ற நாகரீகமான , இயல்பான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
  • இரண்டு பக்கங்களுக்குள் கவிதை இருக்க வேண்டும். (A4 அளவு தாள்களே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது)
  • 1வது பரிசு 1500.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1500.00 இந்திய ரூபாயும் வழங்கப்படும்.
  • 2வது பரிசு 1000.00 ரூபா பெறுமதியான புத்தகங்களும் 1000 .00இந்திய ரூபாயும் வழங்கப்படும்.

தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டியில் யாரும் கலந்து
கொள்ளலாம். பரிசு பெறும் ஆக்கங்கள் ஆண்டு மலரிலும் , தமிழ் பிரவாகக்
குழுமத்திலும் பிரசுரிக்கப்படும். மற்றைய ஆக்கங்கள் தமிழ் பிரவாகக் குழுமத்து
இழைகளாகப் பிரசுரிக்கப்பட்டு உறுப்பினர்களின் கருத்துப் பகிர்வுகளுக்கு
சமர்பிக்கப்படும்.

எந்தவொரு ஆக்கமும் தனிமடலில் *Thamizmakal@gmail.com *என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். போட்டி சம்மந்தமான மேலதிக விபரங்களுக்கும் இதே மின்னஞ்சல் மூலமே தொடர்பு கொள்ளவும். Subject பகுதியில் தமிழ் பிரவாகத்தின் முதலாம் ஆண்டு இலக்கியப் போட்டிகள்- 2008 என்று குறிப்பிடவும்.

இணையத் தளத்தில் எழுதிவரும் அத்தனை அன்புள்ளங்களும் இவ் அறிவித்தலை ஏற்று பங்குபெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுவதோடு ஆர்வமுள்ள படைப்பாளிகள் , இணையத்தள அனுபவமில்லாத ஆனால் எழுத்துத் திறமையுடைய உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்குமாறும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

படைப்புகள் கட்டாயமாக யுனிகோடு முறையிலான ஈ-கலப்பை
தமிழ் உருவிலே தட்டச்சுப் பெற்றிருக்க வேண்டும் என்பது மிக
முக்கியம்.

இந்த இலக்கியப் போட்டிகளை அனைவரும் அறிந்துகொள்ள உதவியாக குழும
உறுப்பினர்களும், நண்பர்களும் இவ் இலக்கியப் போட்டி அறிவித்தலை தத்தமது
வலைப்பூக்களிலும் , வலைத்தளத்திலும் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.
நன்றி !
வணக்கம்!!

Monday, March 3, 2008

சந்தேகம்

நிலவிலிருக்கும் கறையாக
ஏதோ ஒன்று
உன் பார்வையில்,
என்னைத் துன்புறுத்தி
எதையோ தேட முயல்கிறது
எனக்குள்ளே துழாவி..!

அழகிய வர்ணங்களால்
வரையப்பட்ட ஓவியம்,
ஆனாலு
பிசாசுகளின் கோரத்தாண்டவ சித்தரிப்பாக
ரசிக்க முடியாத சங்கடம்!

அழகிய பூவின் இதழ்களை
காற்றில் சருகுகளாய்
பிய்தெறிந்த
கொடூரமான கூரிய நகங்களில்
நாசூக்கான நகப்பூச்சு
அலங்காரமாய் தெரியவில்லை!

நிஜத்தின் பிம்மங்களை
பேதமைப் படுத்திய
உன் கண்ணாடி அரியத்தின் கீழ்
என் அன்பை பஞ்சாக எரிக்கும்
சூரியக் கதிரின்
தெறிப்புகள்...!

கைதி.

மூளைக்குள் புதைக்கப்பட்ட
தனிமை உணர்வுகளின்
பொறிகளுக்குள் முடங்கிப் போன
நானும் என் சுயமுமாய்...
சொல்லப்படாத வார்த்தைகளின்
கைதி நான்!
மௌனமாயிருக்கும்
ஒவ்வொரு பொழுதும்
பேச வேண்டிய கட்டாயங்களை
உணரப்பட்ட போதும்
நான், என் இயலாமையோடு
மௌனித்திருக்கிறேன்,
எனக்கான
முட்படுக்கைகளை தயாரித்தபடி...!
குற்றவாளிக்கான சித்தரிப்புகளோடு
வாழ்கைப் போரில்
தோற்றுப் போன கைதி நான்!
பழி சுமத்தெவென்ற ஆயத்தங்களுடன்
கேள்விக் கணைகளோடு
எதிரில் நீ!
என்னை நியாயப்படுத்தெவென்ற
சாட்சியங்கள் புறந்தள்ளப்பட,
போர்த்திறன் முடங்கி
முடுக்கிவிட்ட பொம்மையாக
இப்போது இயங்க வேண்டிய
கட்டாயங்களுடன்...
உன் வழக்காடுமன்றத்தில்
எனக்கான நியாயங்கள்
உனக்கு எதுவுமில்லாமல் போனது
விந்தை!
எறிவதற்காக
நீ தேர்வு செய்த கற்களின்
கனமும்,
வீசப்படும் வேகமும், துரிதமும்
கணிக்கும் முன்
சாய்க்கப்படுகிறேன்...
சந்தப்பமளிக்கப்படாத நிரபராதி
என்ற
சொல்லப்படாத வார்த்தைகளுடன்..!
தப்பிவிட்ட முனைப்பில்
என்னைப் புறந்தள்ளி
நடக்கிறாய் அவசரமாய்..!
உன்னோடான
அந்த நாட்களின் சந்தோஷங்க்ள்
இன்றைய நிகழ்வில்
அகழப்பட்ட புதைகுழியில்
ஆழமாக புதைக்கப்பட
மூளைக்குள் திருத்திய உணர்வுகளைச் சுற்றி
உயரமாய் முட்கம்பி வேலிகளை
என்னை நானே
சிறைப்படுத்துகிறேன்...
இளமையைக் கரைக்கும் அவசரத்தில்
ஆயுளுடன் ஓடிக்கொண்டிருக்கிறேன்..
பழையன மறக்கும் முனைப்புகளுடன்
உன்னை துரத்தும்
விருப்பமின்றி....

Wednesday, February 13, 2008

நீ

ஏனிப்படி மாறினேன்?
உனைப் பார்த்த கணத்தில்
உயிர் சிதைந்து மண்டியிட்டேன்!
உடல் பற்றிய உருவமில்லா
தீயில்
மனக் கருகியதோ?
மருகியதோ?

என் கணத்தாக்கங்களை
ஸ்தம்பிக்க வைத்த
உயிர் கொல்லி!

பகலுக்காய் ஏங்கினேன்
உனைப் பார்க்க வேண்டி..
நேரத்துக்கு தூங்கினேன்
நீ வரும்
என் க்னவுகளுக்காண்டி..

மரணத்தை விட கொடிய நொடி
உன் பிரிவின் நாழி!
எரிமலையாய் தகிக்க
ஒரு துளி புன்னகையில்
உயிர் தந்து கொல்கிறாய்.
நீ!

காதல்

மானுடத்தின் சாபக்கேடா
அல்லது
விமோசனமா
என்று விடை கிடையாத
புதிர்!

உயிரின் பூகம்பத்துக்கு
ஊடகம் !
உணர்வுகளிலலூட்உருவும்
மின்னிறக்கம்!
உயிரோடு ஒரு வதை!
உயிரையும்
எரித்துவிடும் சிதை!

தூர இருந்து ரசித்த போது
ரோஜாவாய் சிரிக்கும்
அனுபவித்த பின் தான்
முள்ளாய் குற்றும்
பிரிவுகளால்..

யாதுமாகி நின்று
உருக்கொடுத்து எழுப்பும்;
சமயத்தில்
யாதுமற்றதாக்கி
உருக்குலைத்து அழிக்கும்

Monday, February 11, 2008

எனக்கான வதை..!

தேடலுடலான காத்திருப்புகளை
விதியாக தீர்ப்பு எழுதி வைத்து
காதல் என்ற வரம்
வதையாகத் தந்தவன்
நீ!

முந்திய மாலைப் பொழுதில்
தேன் முகிழ்த்த வண்டு
விலகிப் போன பாதை
பார்த்து
வாடிப் போன மலர்
மாலையாகவும் வழியில்லை
மணக்கவும் முடியவில்லை...

உன் தோள் சாய்ந்த பொழுதுகள்
காதலை ஒரு மைல் கல்லாக நினைத்தேன்..
உன்னைப் பாராத நாட்களில் தான்
உறைக்கிறது
அது வெறும் சுமைக் கல் என்று!

நீயில்லாத நேரங்களில்
வெறுமையாகிப் போன வாழ்கையை
எதை வைத்து நிரப்ப?
உன்னைத் தொடர்ந்து வருவது
உன் நிழல் என்று நினைக்காதே
கூடவே வருவது என் உயிர்.
பத்திரமாக
திருப்பி அனுப்பு...
அல்லது கல்லறையில் தான்
காத்திருக்கும்
என் காதல்!

ஏக்கங்கள் அரித்த மனது
புற்றாகிப் போக
பிரிவு என்ற சர்ப்பம்
அனாக் கொண்டாவாக அணைத்து
மூச்சடைக்க வைக்கிறது!

உன்னைப் பற்றிய
கனவுகளுக்காக ஏங்கிய கண்களுக்கு
தூங்கும் வழி தெரியவில்லை!
உன் நினைவுகள்
துயில் தடுக்கும் காரணிகளாக..

உயிர்த்திருக்க ஒரு காரணமாக
உன் காதல் மட்டும்
என்னுடன் வைத்திருக்க..
எரி நெருப்பில் சிதையாக
அதுவே
என்னை வதைப்பது
என்ன நியாயம்?

சலனமற்ற குளத்தில்
வலை வீசி மீன் பிடித்து
தரையில் விட்டாய்...
உயிரோடு துடிக்கும் வலியை
நீ ரசிப்பதற்காக என்றே
நானும் வலியை
என்னுடன் தக்க வைக்கிறேன்..

வெறும் காற்றே
சுவாசமாகவும், சுவையாகவும்
மொழி தெரியாத தீவில்
தனியாக நான்!
வாழ்கையின் பாதை
முன்னே நீளமாக
பயமுறுத்தும் எதிர்காலத்தில்
எனக்கென்று துணையாக
உன் காதலுடன் மட்டுமே
பயணிக்கிறேன்.....
தேடலுடனான காத்திருப்புகளில்
எழுதப்பட்ட விதியை
ஏற்று....!

Saturday, December 29, 2007

ஆழிப் பேரலை - 2004. நினைவு!

எத்தனை உயிர்கள்? எத்தனை உறவுகள்?
காவு கொண்ட நாளது..
எத்தனை காலம் போனாலும்
மாறாத ரணமது ,

அலைகளெல்லாம் ஆழியாகி அழிக்க வல்லது
இயற்கை அன்னையின்
ஊழித் தாண்டவத்தின் உச்சம் கொடியது..
விழுங்குவது தன் மக்களுயிர் என்று
விளங்கிய படியே அன்னை பசியாறிய நாளது..

கால தேவன் நாளேட்டில்
கடற்கரையின் கறைகள் தீட்டிய கோரம்!
கடல் கலந்த அலைகளை மறைத்த
பிணக்குவியல்களின் பாரம்!

கொள்ளி போட நாதியின்றி..
கோடித் துணி போர்த்த ஆளின்றி
அள்ளி எடுத்து குப்பையாய்
ஆங்கோர் தீவின் ஓரத்தில்
எரிந்த சாம்பல் மேடுகளில்
என்பு பொறுக்க்கி , ஈமை செய்ய
எவரும் இங்கில்லாமல்
பொங்கிய புனல் வந்து
அனல் கொண்டு குவித்த நாளது..!

Friday, December 28, 2007

பாவம் காலதேவன்!

இதோ
ஒரு வருடம் உதிர்கிறது.
இந்த மரத்தின்
முன்னூற்றி அறுபத்தி ஐந்து இலைகளும்
சருகுப் புளுதிகளாகி
மண்ணோடு மண்ணாக
மக்கி போகிறது..

கால தேவன் தன்னுடைய
ஒரு புத்தகத்தை
மூடி வைக்கிறான்.
அவனுடைய
புத்தகங்களின் பக்கங்களில் தான்
எத்தனை எத்தனை
கறைகள்?
எத்த்னை கறுப்புப் பக்கங்கள்?
அழிக்க முடியாத
குருதிப் புனல்களில்
எழுதப்பட்ட
வரலாற்று தொடர்கள்!


உலகத் தேசிய வரைபடத்தின்
ஒவ்வொரு
இரத்தக் கறைகளும்
அவனுடைய நாளேட்டை
அசுத்தப்படுத்திவிட்டன.
வழமை போல..
கால தேவனின் கண்களில்
கூட
கண்ணீரா?
ஆம்.....
ஐந்தடி மனிதனின்
ஆறறிவு
அகிலத்தைப் படுத்தும் பாட்டைப் பார்த்து
அவன் அழுகிறான்.

மிருகமாக இருந்தவனை
இனமென்றும்,மதமென்றும்
மொழியென்றும்
வாழ்வியலுக்காக
வரையறுத்து
தன்னை தானே மானுடமாக்கியவன்..
இன்று மீண்டும்
அதே வரைமுறைகளைக் கொண்டு
எப்படி
மிருகத்தனமாகினான்...
என்று புரியவில்லை
கால தேவனுக்கு!

ஆயினும்
இன்றைய புதிய தளிர் இலையைப்
பார்க்கிறான்...
நம்பிக்கையோடு...
இனிமேலாவது
இவை கறைப்படாமல் இருக்குமாம்..
பாவம்
கால தேவனுக்குக் கூட
பகல் கனவு வரும் போலும்

Wednesday, August 22, 2007

புலன்கள் துருத்தும் உணர்வுகள்..!

சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான்
இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்...!

எனக்கான சரியான இடம்
எங்கோ ஒரு புள்ளியில் புலமாய்,
பயணப்பட வேண்டிய அகதியாய்
நான் !
தவிர்க்கவியலாத , அவசியமான
நீண்ட தூரப் பயணம்
சென்றடையவென்று இன்னமும்
மீந்திருக்கிறது.
சாவிகள் தொலைந்து போன
துருப்பிடித்த இரும்புக் கதவுகளின் பின்னால்
நான் தேடிய என் வாழ்கையின் தீர்வுகளும்
தேர்வுகளின் தகமைகளும்
அடைந்து போனதை
உணர்த்தப்பட்ட நிஜத்தின் வலி
மீண்டு ...வெளிக் கொணர திராணியில்லை..
முயற்சிகளின் தோல்விகளில்
வெகு விரைவில் களைத்துப் போகிறேன்.

விளக்கங்கள் சொல்லவியலாத
கனத்த மனம்
எதனுள்ளோ நான் சிறைபட்டதை
எனக்கு உணர்த்துகிறது.
ஆனாலும் ...அப்பால்
பயணிக்கவென்று எதிரில்
வெறிச்சோடிய
தனித்துப் போன வாழ்கைச்சாலை!
தடைகள் தகர்த்தி
நட்க்க வேண்டிய கட்டாயங்கள் எனக்கு!
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு,
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

நினைவுகள் சுமந்து களைத்துவிட்ட இதயத்துடன்
நரகங்களுக்கூடாகச் செல்லும்
புதர்கள் மண்டிய முட் பாதைகளில்
எனக்கான சுவர்க்கத்தின் புலத்தை தேடியபடி..
மூச்சிரைக்கிறது..!
இளைப்பாறவும்,
சற்றே சுமை இறக்கவும்
ஏதாவது இடம் தேடுகிறேன்...
மயானங்கள் இறைந்த பூமியில்
சமாதிக் கற்களா சுமை தாங்கியாக?

ஆனாலும்..அப்பாலும்...
நான்
எனக்கான மனிதர்களின்
இதயங்கள் வைக்க வேண்டிய இடத்தில்
பாறாங்கற்கள் புகுந்திருப்பதை
கவனிக்க விரும்பவில்லை,
நிரந்தரமாய்
முகங்களுக்கு மேல்
முகமூடிகள் பூட்டிய வேடதாரிகளை
பார்க்க வேண்டாம்,
என்னை நானே
இறக்கைகள் இழந்த பட்சியாய்
பச்சாதபப் பட வேண்டாம்...
ஆதலால்
பயணப்பட வேண்டும்..
ஏனெனில்
சில சமயம்
என் புலன்களில் துருத்தும் உணர்வு
நான் இங்கே சார்ந்திருப்பதற்கான
தகமைகளற்றவளாய்!!

முட்டாள்.

உன்னைப் பார்த்த நேரத்தில்
உயிர் நாடிகளில் குளிர் காய்ச்சல்
உறங்க விடாமல்
உயிர் வதைத்தது!!

தேடி வந்து வதை தந்துவிட்டுப் போனவனே
எந்த ஜென்மத்துப் பகையை
இன்று
இங்கு காதலலென்று சொல்லி
பழி தீர்க்கிறாய்?

என் நீரோடை மனதில்
சின்னதாகக் காதல் கல் எறிந்தாய்
என்றிருந்தேன்...
எப்படி இப்படி
இதயத்தில்
பாறாங்கல்லாய் கனக்கிறது?

நேரங்கள் உருண்டோடும் போதெல்லாம்
உன் பிரிவை
கணங்களால் கூட்டியது.
மறு முறை
உன்னைச் சந்திக்கும் வரை
என் கணத்தாக்கங்கள் ஸ்தம்பித்துப் போயின.

உனை காணாத வேளைகளில்
கடிகார முட்களுக்கும்
வேகம் வரவில்லை,
எனக்கு வேதனையே!!

நீ வந்த பின்
அவற்றுக்கும் வேகம் கூடியது
என் நாடித்துடிப்பைப் போல்,
அதுவும் வேதனையே...!

உன்னைப் புறந்தள்ளி
நான் தப்பிப்பதற்கான எந்த வழியுமில்லை!
காதல் என்ற சாபத்துடன்
என் துருப்பிடித்த இதயமும் எண்ணங்களூம்
உன்னை உள்வாங்கிய பின் தான்
சுரணை ஏசுகிறது,
நான் எத்தகைய முட்டாளென்று...!!

Friday, August 17, 2007

இயலாமை


நான்
அமைதியாய் இருப்பது போல்
பாவனை செய்து பார்க்கின்றேன்,
ஆயினும் கடினமாகவே இருக்கின்றது
தினமும் நானாக இல்லாமல் நடிப்பதென்பது...
என்னைச் சுற்றிய சிந்தனைகளில்
அமிழ்த்தவென்று முயன்ற எத்தனிப்புகள் தோற்று
என்னை விட்டு நானே வழுக்கி
எங்கே போய்க் கொண்டிருக்கின்றேன்?

குழப்பங்கள் இல்லாத என்னுடைய சுயத்துக்கு
இனி எங்கே நான் போவது?
கிளறிக் கிளறி நாறிப்போன குப்பைகளுக்குள்
மடிந்து மக்கி உக்கிப் போனது என்ன,
வேட்கை நிறைந்த இலட்சியங்களும்
அரை குறையாய் குற்றுயிராய்
உடைந்து போன கனவுகளுமா?
மலர் தூவும் வசந்தமாய் கனவு காண
புயல் உமிழ்ந்த உக்கிரமான தோல்வியில் காதல்
மரணித்துப் போன யதார்த்தம் சுட்ட இதயம்
மயானமாய்.. சூனியமாய்..வெறிச்சுப் போய்...


அழகாக மெருகேற்றப் பட்ட விதானங்களுடைய
உலகத்தையும்
ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவங்களையும் அடையும் வரை
காலம் எனக்காக காத்திருக்க மாட்டேனென்ற அநியாயத்துடன்
விரைந்து விரைந்து பயணப்பட
விலகிப் போன உறவை துரத்தும் திராணியில்லை..
மூச்சிரைக்க மூப்படையும் உயிர்க்க்கூட்டைக் காவிய
என்னுடைய ஆயுளின் பயணித்தலில்
வாழ்கையின் கவனப் பிசகல்கள்
சரி செய்யப்படவியலாத தரவுகளுடன்
மிகப் பிழையான கணக்காகிப் போனது போல..?

சூனியம் வைக்கப்பட்ட விதியில்
குழிகளுக்குள் தள்ளிவிட எதிரிகள் தேவைப்படவில்லை,
தூக்கி விட நண்பர்களும் கிடைக்கவில்லை..
என்னைப் பற்றிய கழிவிரக்கங்களுடன்
நூலளவு நம்பிக்கையை பற்றிய தொங்கலில்
ஊசலாடிய எதிர்காலத்தின் வேயப்பட்ட நூலெணியில்
என்னை நானே தாங்கிக் கொண்டு பரிதாபமாக....

வசந்தத்துக்கும் வலிகளுக்கும் மத்தியில்
அன்புக்கும் வெறுப்புக்குமான மையத்தில்
வாழ்கைக்கும் மரணத்துக்குமான இடைப்பட்ட ஆயுளில்
எனக்கும் வலுவிழந்த என்னுடைய சுயத்துக்கும் நடுவில்
அந்தரத்தில் தொங்கும் பாதைகளில்
முட்கள் துருத்திய அபாயம்...

வாழ்கைச் சாகரத்தின் சுழிகளுக்குள்
தொலைக்கப்பட்ட காதலின் பின்னான நிகழ்வுகளில்
ஆர்ப்பரிக்கும் நினைவலைகளின் ஆர்ப்பரிப்பில்
நீலமான ஆழமான, ஆல காலமான மனம்
என்னை அமிழ்த்தி மூச்சிரைக்க வைக்கிறது...
வலி கண்ட இதயம் போராடிய களைப்பில்
கேட்டது
நிற்கட்டுமா ? இருக்கட்டுமா?

Thursday, August 16, 2007

சிசு வதை



அது மூடிக் கிடப்பதில்
சந்ததியாரின் சந்தேகம்
பனிக்காலங்கள் வந்து போனது
பழங்காலக் கருக்குழிக்குள்
நான் கிடந்தேன்.
எப்பொழுதும் போல் பகல் வரும்.
சதைப் புண்களின் சினந்த அவஸ்தை...
அப்பா அவசரம்,
அம்மா மௌனம்,
படியேறி விஞ்ஞான மாமா,
உள்ளே ஊரும் சின்ன நான்.
சரீர வித்தியாசத்தில்
பெட்டைச் சிசு..

அம்மா கொட்டிக் கழுவினாள்
சும்மா போகிற ஜீன்கள்
உறுப்புப் புரட்ச்சி
அறுத்துப் புரட்டி
என் கபாலத்தில் கத்திரி.

அப்பொழுது எனக்கு மூளையில்லை
மூடிய ஓர் வயிற்றுக்குக் கீழ்
இந்தச் தசைகளைச் சிந்தியவன்
கொல்லச் சொன்ன
சந்ததிக் காமுகன்..
என் அப்பனாம்!

மேல் முனைக் குடல்குழியின்
விஞ்ஞான உப்புக்கள்
குடல் பற்றிய பிஞ்சு நகங்கள்
தெரிந்தும்
மலத்தோடு கொட்டிவிட்ட மனிதர்.

அப்பால்...
குளிர் வளர்க்கும் காட்டு மரங்கள்
வாகன ஓரத்தில் வியர்த்த முகம்
வான வீதியில் பறவைக் கூட்டம்..
கருக்கலைப்பில்லையாமே அவையிடத்தில்?
செறிந்து போன உலகின் நிறம் பார்க்க ஆசை.
விஞ்ஞாத்தைத் தலையில் கொட்டியது
கொடுமை

சகதியில் கிடந்து வெம்பிய பிஞ்சாய்
வந்த இடத்திற்கே திரும்பவும் எறிய
மீண்டும்
சதைப் புண்களின் சினந்த அவஸ்தை
அப்பா அவசரம்,
அம்மா மௌனம்,
படியேறி விஞ்ஞான மாமா,
பழங்காலக் கருக்குகுழிக்குள்
நான் கிடந்தேன்.

Wednesday, August 15, 2007

மகளுக்காக...



வயிற்றிலிருப்பது பெண் சிசு என்று அறிந்த பின் பேதைத் தாய் பதை பதைத்தாள். அவள் வயிற்றிலிருக்கும் சிசு அம்மா என்னை வாழ விடு என்று கெஞ்சுவதாக உணர்வில் தவித்துப் போனாள். இன்னொரு தரம் ஒரு பெண் சிசு,...என்னைப் போலே அவள் வாழ்வுமாகிவிடுமோ அல்லது பிறந்த கணமே காணாமல் போய்விடுமோ என்ற கலக்கம் தாய்க்கு! ஆனாலும் மகளுக்காக ஒரு முடிவு எடுக்கிறாள்...சரிவருமா என்று சொல்லுங்கள்...!



பெண் புத்தி பின் புத்தி
அதில்
உன் புத்தியும் சேர்த்தி!

எங்கிருந்தோ ஒருவன்
விதியை எழுதுகிறானாம்,
உன் விதியை
மாற்றி எழுத
மதியிருந்தால்
நிம்மதியாய் நானிருப்பேன்.

பேதை சிசுவே!
உலகப் படம் பார்க்க விரும்புகிறாய்
உன்னை படம் போட
ஒரு கூட்டமே காத்திருக்கிறது.
இங்கே..!

சக்தி இருந்தால்
என் ஆயுள் காலம் வரை
வயிற்றுக்குள்ளேயே
உன்னை சுமந்து திரிவேன்...
மகளே!
நீ
பாதுகாப்பாய் இருப்பாய் அங்கு!

என் முலை திருகி
பால் பருகும் முன்னமே
உன் உயிர் திருகி எறிய
ஒரு கிண்ணம் கள்ளிப் பால்
வைத்திருக்கிறான்
உன்னப்பன்!

பிரசவித்த மயக்கம்,
என்
கண் விழிக்கும் முன்னமே
நீ
மீளாத்துயிலாகிவிடுவாய் ...
யம தூதர்கள் தூரத்திலில்லை...
என் கர்ப்பகிரக வாசலிலேயே...
காத்திருப்பார்கள்!!

என்னுள்
உனை விதைத்தவனே
இன்று
உன் உயிரை அறுவடை செய்ய
நெல்மணிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றான்...!!

கருவறைக்குள்ளிருக்கும்
உனக்கு
கல்லறைக்கு இடம் தேடுகிற
உறவு முறைகளையா
தேடுகிறாய் சந்திக்க?

நீ பிறந்து
ஒரு கணம் அம்மா என்றழுதால்
ஆயுள் வரைக்கும்
என்னை கொல்ல
அது ஒன்று போதும்
இவர்கள் உன்னைக்
கொன்ற பின்...!!

வண்ணச் சட்டை மாட்டி
வடிவாக தலை சீவி
சின்னக் கை பற்றி
சிங்காரமாய் உனை தூக்கி
என்னமாய் பவனி வரலாம்
எல்லாமும்
சரியாயிருந்தால்...?

ஆனால்....????

இப்போதெல்லாம்
நான்
ஆண்டவனை வேண்டுவதில்லை,
அவனும் ஆண்பால் என்பதால்...
அவனில் சரிபாதியாய்
இருப்பவளும் அனுமதிக்கிறாளே..
அதனால்.....
அவளும் வேண்டாம்...!

யாருமற்ற தனிமையில்
நிராயுத பாணியான நான்
அடிமையே தவிர,
போராளியல்ல
உன்னைக் காப்பாற்ற!

ஆனாலும்...இப்போது
ஒரு போராட்டம் தேவை தான்
தாய்மை
என் உரிமை !
தீர்மானம் போடவும்
தீர்த்துக்கட்டவும் இவர்கள் யார்?

பாலூட்ட மட்டுமா?
பாதுகாக்கவும்
நான் மட்டும் தான்
உனக்கு!!


சரி சிசுவே!
உன் கருவறைக் கனவை
கலைக்கவில்லை!


உனக்கொரு உலகம்
சமைக்க
என் சிறையை உடைப்பேன்!
நாளைக்கே நான்
இவர்களிடம் காணாமல் போவேன்...

இன்னொரு இடத்தில்
உனக்காக மட்டுமேயான நான்...!
உன் வரவுக்காக மட்டுமே
என் வாழ்கையின் காத்திருப்புகள்!

இத்தனை காலமும்
என் சுற்றத்தின் வார்த்தைகளில்
வாழ்கையை
ஏமாந்தேன்!
இன்று உன் வார்த்தையை
என் வாழ்கையாக்குகிறேன்!


ஆனாலும் எச்சரிக்கிறேன்!

உலகம்
ஒரு சாக்கடை!
ஈதேனின் பூங்காவனமென்று
பிரவேசிக்காதே!

இங்கே...
பூக்களாய் சிரிக்கும்,
பசுமையாய் பேசும் மனிதர்களை
நம்பி
வாழ்கைப் பாதையில்
அலட்சியமாய் பிரயாணிக்காதே...
அத்தனைக்குமடியில்
கண்ணிவெடி புதைத்த
களவுகளிருக்கும்.....
நொடியில் நொருங்கிவிடுவாய்!!!

உன் கனவுகளூக்காக மட்டுமே
என் கருவறையுடன்
இந்த எல்லகளைக்
கடக்கிறேன்...

என்னுடைய
உண்மையான வாழ்கையை
இங்கே தான் தொடங்கப் போகிறேன்,
உன்னுடன்
உன் கனவுகளுக்காக....!!

காத்திருக்கிறேன்
ஒரு புதிய விடியலுக்காய்,
உனக்கும் சேர்த்து..!